Disqus Shortname

அங்கன்வாடி கட்டடத்திற்கு ஆபத்து

உத்திரமேரூர் ஜூலை 15:
அரும்புலியூர் கிராமத்தில், அங்கன்வாடி மையம் அருகே, ஆபத்தாக உள்ள பாழடைந்த கட்டடத்தை அகற்ற வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டுள்ளது அரும்புலியூர் கிராமம். இங்குள்ள ஒத்தவாடை தெருவில், அப்பகுதிக்கான அங்கன்வாடி மையம் மற்றும் ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இதில், அக்கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இந்த அங்கன்வாடி மைய கட்டடம் அருகே, கடந்த 1966ம் ஆண்டு, மகளிர் சங்கத்திற்கென கட்டப்பட்ட அலுவலக கட்டடம், தற்போது, மிகவும் சிதிலமடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதனால், அங்கன்வாடி மைய குழந்தைகள் மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்கள், இக்கட்டடத்தின் அருகே விளையாடும் போது, அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, குழந்தைகளின் நலன் கருதி, இந்த பாழடைந்த கட்டடத்தை அகற்ற வேண்டும் என, அப்பகுதி பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.