Disqus Shortname

காதல் திருமணம் செய்த கர்ப்பிணி பெண், மர்மச்சாவு கொலையா? போலீஸ் விசாரணை

உத்திரமேரூர் டிச,30,

காதல் திருமணம் செய்த கர்ப்பிணி பெண், கிணற்றில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கர்ப்பமானார் 
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த பழவேரி கிராமத்தை சேர்ந்தவர் நந்தன். இவருடைய மகள் விசாலாட்சி(வயது 17). இவர், அரும்புலியூரில் 10–ம் வகுப்பு படிக்கும் போது, அதே ஊரை சேர்ந்த முத்துநாயக்கன் மகன் கார்த்திக்(22) என்பவருடன் காதல் மலர்ந்தது. இருவரும் நெருங்கி பழகியதால் விசாலாட்சி கர்ப்பம் ஆனார்.
இதுபற்றி அறிந்த விசாலாட்சியின் குடும்பத்தினர், இரு தரப்பு உறவினர்களையும் அழைத்து பேசினார்கள். முதலில் மறுப்பு தெரிவித்த கார்த்திக், அதன்பின்னர் ஒப்புக்கொண்டார்.
திருமணம்
வாலாஜாபாத்தை அடுத்த ஊத்துக்காடு எல்லையம்மன் கோவிலில் கடந்த 24–11–2013 அன்று கார்த்திக்–விசாலாட்சி இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்கு கார்த்திக் தவிர அவரது உறவினர்கள் யாரும் வரவில்லை.
திருமணம் முடிந்து சில நாட்கள் கழித்து, 2 நாளில் வந்து விசாலாட்சியை அழைத்து செல்வதாக கூறிச்சென்ற கார்த்திக் அதன்பிறகு மனைவியை கூட்டிச்செல்லவில்லை. அவ்வப்போது இரவு நேரங்களில் மனைவியை சந்தித்து பேசினார். அப்போது அவர், ‘‘என்னை மறந்து விடு. நான் வெளிநாடு சென்று பிழைக்கப்போகிறேன்’’ என்று கூறி வந்தார். இதனால் மீண்டும் ஊர்க்காரர்கள் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
கிணற்றில் பிணமாக கிடந்தார்
இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல் விசாலாட்சி மாயமானார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர். இதற்கிடையில் நேற்று மாலை 3 மணியளவில் அரும்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட சீத்தாவரம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் விசாலாட்சி மர்மமான முறையில் பிணமாக மிதந்தார்.
அவரது தலையில் காயம் காணப்பட்டது. விசாலாட்சியின் காதல் கணவர் கார்த்திக் தலைமறைவாகி விட்டார். இதுபற்றி தாளவாக்கம் போலீசில் பொதுமக்கள் புகார் செய்தனர். டி.எஸ்.பி.ராஜேந்திரன் உத்தரவின்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் கண்ணகி வழக்குப்பதிவு செய்து விசாலாட்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாலாட்சி, கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

No comments