உத்திரமேரூரில் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மன் ஆலய மயானக் கொள்ளை திருவிழா
உத்திரமேரூர் 23/02/2020
உத்திரமேரூரில் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு உற்சவ ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் புஷ்பக விமான பல்லக்கில் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் மங்களவாத்தியத்துடன் வான வேடிக்கைகள் முழங்க திருவீதி உலா வந்த அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை முடிந்தபின் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்த 7 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் 8 ஆம் நாளான நேற்று உடல் முழுக்க எலுமிச்சப்பழங்களை குத்திக் கொண்டும் முதுகில் அலகு குத்தி கார், வேன் டிராக்டர்கள், உரல்கள்,கிரேன் உள்ளிட்ட வாகனங்களை இழுத்தும், அந்தரத்தில் தொங்கியபடியும், கால்களில் கட்டை கட்டிக்கொண்டு கட்டையாட்டம் ஆடியும், காளி வேடமிட்டும் முக்கிய வீதிகள்
வழியாக ஊர்வலமாக வந்து மயானத்தை சென்றடைந்தனர். மயானத்தில் உள்ள கோவிலில் பக்தர்கள் அம்மனுக்கு காய்கறிகள், பழங்கள் விளைபொருட்களை செலுத்தியும், வேப்பிளை ஆடை அணிந்தும், அம்மனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். இரவு ஆலய வளாகத்தில் தெருக் கூத்து நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பொது மக்கள் பலர் கலந்து அம்மனை வழிபட்டனர்.
No comments