உத்திரமேரூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்
உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட குடியிருப்பு மற்றும் வியாபாரிகளிடத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது என பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் பேரூராட்சி முழுவதும் பிளாஸ்டிக் தடை குறித்து துண்டு பிரசுரங்கள் மூலமும், நாடகங்கள் என பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று பேரூராட்சி நிர்வாகத்தினர் உத்திரமேரூர் பாலசுப்பரமணியர் கோவில் தெருவில் நடந்த சந்தை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. உடனே பேரூராட்சி அலுவலர்கள் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விதி முறைகளை மீறி பயன்படுத்திய பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து ரூ.1500 வரை அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
No comments