Disqus Shortname

உத்திரமேரூரில் கிணற்றில் வீசி குழந்தை கொலை: உறவுப்பெண் கைது


உத்திரமேரூர், நவ. 11–

உத்திரமேரூர் அடுத்துள்ள கட்டியாம் பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராமு. இவர் சென்னையில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுந்தரி. இவர்களது குழந்தைகள் கோபி(4), ரோஜா (1½).
நேற்று காலை சுந்தரி குழந்தை ரோஜாவை அழைத்துக் கொண்டு வயலில் கூலி வேலை செய்ய சென்றார். போகும் வழியில் ராமுவின் தம்பி சேட்டு மனைவி பூங்காவனம், சுந்தரியை சந்தித்தார். நான் குழந்தையை பார்த்துக் கொள்கிறேன். நீ வேலைக்கு போ என்று கூறி குழந்தையை வாங்கிக் கொண்டார்.
பின்னர் சுந்தரி வேலை முடிந்து குழந்தையை அழைத்து செல்ல பூங்காவனம் வீட்டுக்கு சென்றார். அங்கு குழந்தை இல்லை. பூங்காவனம், அவரது கணவர் சேட்டு, தந்தை பெரியசாமி ஆகியோர் மாயமாகி இருந்தனர்.
இதனால் சுந்தரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. குழந்தையை ஊர் முழுக்க தேடிப் பார்த்தார். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் ஊரில் உள்ள ஒரு கிணற்றில் குழந்தை ரோஜா பிணமாக மிதந்தது.
இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையின் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினார்கள்.
ராமுவுக்கும், அவரது தம்பி சேட்டுவுக்கும் சொத்து தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது. மேலும் சேட்டுவுக்கும், பூங்காவனத்துக்கும் திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் பூங்காவனம் ஆத்திரத்தில் குழந்தை ரோஜாவை கிணற்றில் வீசி கொலை செய்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக உத்தரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத், சப்–இன்ஸ்பெக்டர் முனுசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பூங்காவனத்தை கைது செய்தனர். அவரது கணவர் சேட்டு, தந்தை பெரியசாமி ஆகியோரை தேடி வருகிறார்கள்.

No comments