Disqus Shortname

இருளர்களுக்கு ரேஷன் அட்டை: ஆட்சியர் வழங்கினார்

 காஞ்சிபுரம் நவ, 26:
உத்தரமேரூர் பகுதியைச் சேர்ந்த இருளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன் புதிய ரேஷன் கார்டுகளை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.ஆட்சியர் கா. பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட திட்ட அலுவலர் அருள்ஜோதி அரசன் உள்பட அனைத்துத் துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து புதிய ரேஷன் கார்டு, வீட்டுமனைப் பட்டா, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட 284 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில் அதிகாரிகளிடம் ஆட்சியர் கூறியது: முகாமில் பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் முக்கியமானதாக கருத வேண்டும். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் மனுக்களை கொடுக்கின்றனர்.
எனவே அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி, சம்மந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று சட்டத் திட்டங்களுக்கு உள்பட்டு குறைகளைத் தீர்க்க வேண்டும் என்றார். இக்கூட்டத்தில், உத்தரமேரூர் வட்டம், எலபாக்கம், இரட்டைமங்கலம், திருப்புலிவனம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 24 பேருக்கு ரேஷன் கார்டுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

No comments