பஸ் டிரைவரை அரசியல் கட்சி பிரமுகர் தாக்கியதால் பரபரப்பு
உத்திரமேரூர், டிச,07 : உத்திரமேரூரில் இருந்து எல்.எண்டத்தூர் வழியாக மதுராந்தகம் செல்லும் பேருந்து நேற்று மாலை 5.30 மணிக்கு உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அப்போது எதிரே வந்த கார் பஸ் மீது லேசாக உரசியது. இதனால் பேருந்து டிரைவருக்கும், காரில் வந்த நபர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு சமாதானம் செய்து காரையும், பஸ்சையும் அனுப்பி வைத்தனர். பஸ் பட்டச்சேரி அருகே சென்ற போது, பஸ்சை ஓவர்டேக் செய்த கார் பேருந்தை வழிமறித்து நின்றது. காரில் இருந்து இறங்கிய கும்பல் பஸ் டிரைவரை பலமாக தாக்கிவிட்டு சென்றனர். இதில் பலத்த காயமடைந்த பஸ் டிரைவர் இளையராஜாவை (34)பயணிகள் மீட்டு உத்திரமேரூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
உத்திரமேரூரில் நடக்கும் ஒரு அரசியல் கட்சி மாநாட்டிற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கண்முன்னே தாக்குதல் நடந்ததாகவும், மாநாட்டில் கலந்து கொள்ள வந்த அரசியல் கட்சி பிரமுகர்கள்தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும், பயணிகள் தெரிவித்தனர். உத்திரமேரூர் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
No comments