Disqus Shortname

காதலனின் வீட்டு வாசலில் காதலி தூக்கிட்டு தற்கொலை

உத்திரமேரூர்அக்.20 : சாலவாக்கம் அருகே, காதலனின் வீட்டு வாசலில், துாக்கிட்டு தற்கொலை செய்த கொண்ட பெண்ணின் உடலை கைப்பற்றி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு, சிங்க பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா, 25; சாலவாக்கம் கூட்டுச்சாலை பகுதியில், பெண்கள் அழகு நிலையம் வைத்துள்ளார். இவருக்கு திருமணமாகி, நான்கு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

சில மாதங்களாக...
கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடால், விவாகரத்து பெற்று, மூன்று ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு, சாலவாக்கம் அடுத்த, நடராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த புகழேந்தி, 24, என்பவரது வீட்டின் வாசலில் உள்ள வராண்டாவில், பிரியா துாக்கில் பிணமாக தொங்கினார்.இதுகுறித்து, அப்பகுதி வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பிரியாவின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பிரியா அழகு நிலையம் வைத்துள்ள பகுதியில், புகழேந்தி முடி திருத்தகம் வைத்துள்ளதும், இருவரும் சில மாதங்களாக, நெருங்கி பழகி வந்ததும் தெரியவந்து உள்ளது.

மறுப்பு
மேலும், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, புகழேந்தியின் வீட்டுக்கு சென்ற பிரியா, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, அவரை வற்புறுத்தியதாகவும், அதற்கு புகழேந்தி மறுப்பு தெரிவித்ததால், மனமுடைந்த பிரியா, புகழேந்தியின் வீட்டு வாசலில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்
என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

No comments