உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிப்பு நோயாளிகளுக்கு 3 படுக்கையறைகள்
உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனை கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 3 படுக்கையறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் உட்பட மூன்று மாவட்டங்கள் தனிமை படுத்தப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் தூய்மை பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் உத்திரமேரூர் பஜார் வீதி, பஸ்கள், கோவில்கள், மசூதிகள்,தேவாலயங்கள் என மக்கள் கூடும் இடங்களில் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காஞ்சி மாவட்ட வழங்கல் அலுவலர் கஸ்தூரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு கொரோனா தொற்று பாதிப்பு நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 3 படுக்கைகளை பார்வையிட்டார். பின்னர் மருத்துவர்களிடம் மருத்துவமனையில் மருந்துகளின் இருப்பு விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். நிகழ்வின் போது வட்டாட்சியர் கோட்டீஸ்வரன்,செயல் அலுவலர் லதா, மண்டல துணை வட்டாட்சியர் ஞானவேல் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
No comments