Disqus Shortname

உத்தரமேரூர் அருகே இரட்டை கொலையில் 5 பேர் கைது

உத்தரமேரூர், ஆக.6-
உத்திரமேரூர் தளவராம்பூண்டி அருகே கடந்த புதன்கிழமை காலை கைகள் கட்டப்பட்டும் தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டப்பட்ட நிலையில் சுமார் 28 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் பிணம் கண்டுபிடிக்கப்பட்டது. அதே நாளில் செஞ்சி வல்லம் அருகேயும் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபரின் பிணம் கிடந்தது. 2 பேர் கொல்லப்பட்ட விதமும் ஒரே பாணியில் இருந்ததால் ஒரே கும்பல்தான் அந்த 2 பேரையும் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் முடிவுக்கு வந்து விசாரணையை தொடங்கினர்.

மதுராந்தகம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன் மேற்பார்வையிலும் உத்திரமேரூர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலுமான தனிப்படையினர் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர்கள் யார் என்பது தெரியவந்தது. உத்திரமேரூர் அருகே பிணமாக கிடந்தவர் அசோக்குமார் என்றும், வல்லம் அருகே கொல்லப்பட்டவர் சுரேஷ் என்றும் இருவரும் நண்பர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கொலைக்கும்பலை தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார், நேற்று பெரும்நகர்-காஞ்சீபுரம் சாலையில் உள்ள செய்யாறு மேம்பாலம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது காஞ்சீபுரம் நோக்கி வேகமாக சென்ற காரை மறித்து அதில் இருந்த 5 பேரிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். அவர்களை உத்திரமேரூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர்கள் 5 பேரும், அசோக்குமார், சுரேஷ் ஆகியோரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

செந்தில், பிரபு, ராஜேஷ், வெள்ளத்துரை, சந்துரு ஆகிய அந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். கொலையுண்டவர்களுக்கும் இவர்களுக்கும் ஜெயிலுக்குள் இருக்கும்போது தகராறு ஏற்பட்டதாலும் மேலும் மாமூல் வசூலிப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும் அசோக்குமார், சுரேஷ் ஆகியோரை கொலை செய்ததாக கைதான 5 பேரும் வாக்குமூலம் அளித்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதி உத்தரவின்பேரில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 

No comments