Disqus Shortname

மாடுகள் குறுக்கே வந்ததால் தனியார் கம்பெனி கார் கவிழ்ந்து 7 பேர் காயம்

உத்திரமேரூர்,ஜன,10 :
மறைமலை நகரில் ஒரு தனியார் கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 100க்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் வேலை பார்க்கின்றனர். இங்கு வேலை செய்யும் ஊழியர்களை கம்பெனி வாகனங்களில் வீட்டில் இருந்து அழைத்து கம்பெனிக்கு வந்து, மீண்டும் வீட்டில் விடுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று மாலை 6 பெண் ஊழியர்களை உத்திரமேரூர் அதன் அருகில் உள்ள கிராமங்களில் விடுவதற்காக கம்பெனி கார் புறப்பட்டது. டிரைவர் தேவராஜன் (34) காரை ஓட்டினார். உத்திரமேரூர் - செங்கல்பட்டு சாலையில் நல்லூர் அருகே கார் சென்று கொண்டிருந்தது.அப்போது சாலையின் குறுக்கே திடீரென மாடுகள் ஓடிவந்தது. இதை பார்த்து  தேவராஜன் உடனே காரை நிறுத்தினார். இதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. காரில் இருந்த தேவராஜன், பிரியா (24), ராகிணி (20), சரண்யா (20), மாலா (20), சத்யா (18)  ஜூலி (20) ஆகியோர் காயமடைந்தனர்.இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் திரண்டனர். காயமடைந்த 6 பேரை மீட்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். படுகாயமடைந்த ஜூலியை செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகாரின்பேரில் உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

No comments