உத்திரமேரூர் அருகே சிலிண்டர் வெடித்து 2 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்
வெடித்த நிலையில் உள்ள சிலிண்டர் |
உத்திரமேரூர் அடுத்த அருங்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டராமன் (42). இவரது மனைவி விஜயா (35). கூலி தொழிலாளிகள். இவர்களது மகன் பாபு (17), மகள் சத்யா (13), திருமுக்கூடல் அரசு பள்ளியில் படிக்கின்றனர். இதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் மாரிமுத்து (45), இவரது மனைவி காஞ்சனா (37). இவர்களது மகள்கள் கலையரசி, கவிதா. வாலாஜாபாத் அரசு
பள்ளியில் படிக்கின்றனர்.நேற்று பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, மனைவியுடன் வேலைக்கு சென்றார் கோதண்டராமன். இதேபோல்
மாரிமுத்து, மனைவியுடன் வேலைக்கு சென்றார். பகலில் திடீரென கோதண்டராமனின் வீட்டில் கரும்புகை வந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், விஜயாவுக்கு தகவல் கொடுத்தனர். சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது. இதில் வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து அருகில் உள்ள மாரிமுத்து குடிசையிலும் தீ பரவியது.
தகவலறிந்து உத்திரமேரூர் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்தனர். அதற்குள் 2 வீடுகளும் எரிந்து நாசமானது. தீ விபத்தில் கோதண்டராமன் வீட்டில் ரூ.2 லட்சம், 5 பவுன் நகையும், 4 ஜோடி வெள்ளி கொலுசுகள், மாரிமுத்து வீட்டில் ரூ.2.5 லட்சம், 7 பவுன் நகை, இரண்டு ஜோடி வெள்ளி கொலுசுகள் எரிந்து நாசமானது. புகாரின்படி சாலவாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.தகவல் அறிந்து உத்திரமேரூர் எம்எல்ஏ கணேசன், தாசில்தார் பேபி இந்திரா ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினர்.
No comments