Disqus Shortname

உத்திரமேரூர் அருகே திருப்புலிவனம் கிராமத்தில் ஆக்கிரமிப்பின் விளிம்பில் உள்ள குளம் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை.

உத்திரமேரூர்
உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் சாய்பாபா கோவில்
சாலையில் சேஷான் குளம் உள்ளது. இந்த குளம் சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவு
கொண்டது. இந்த குளம் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாப்பிற்கு மிக
முக்கியமான ஒன்றாகும். மேலும் பழங்காலங்களில் இக்குளம் அப்பகுதி
மக்களின் மிக முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கியுள்ளது. இந்நிலையில்
இக்குளத்தினை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால்
குளத்தினைச் சுற்றி குளமே தெரியாத அளவிற்கு செடி கொடிகள் வளர்ந்து
புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் அப்பகுதி குடியிருப்புகளில் இருந்து
வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் இக்குளத்தில்
கொட்டப்படுவதால் குளக்கரைகள் தூர்ந்து போவதுமட்டுமல்லாமல் குளம்
மாசடைந்து துற்நாற்றம் வீசுகிறது. இதனால் குளத்தின் நீர் வரத்து
பாதிக்கப்படுவதுடன் பிளாஸ்டிக் கழிவுகளில் மழை நீர் தேங்கி கொசுக்கள்
அதிக அளவில் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு
நோய்கள் ஏற்பட வழிவகுத்துள்ளது. இதுமட்டுமின்றி இக்குளத்தினைச்
சுற்றிலும் சிலர் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனால் இக்குளம்
நாளடைவில் காணாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து
பல்வேறு அதிகாரிகளிடம் பொது மக்கள் புகார் அளித்து இது வரை எவ்வித
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு
இக்குளத்தினை சீரமைத்து கால்வாய்களை தூர்வாரி, ஆக்கிரமிப்புக்களை
அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

No comments