Disqus Shortname

உத்தரமேரூர் அருகே இரு தரப்பினரிடையே மோதல்:14 பேர் கைது


 உத்திரமேரூர், அக். 25
 உத்திரமேரூர் அடுத்த அரசாணிமங்கலத்தை சேர்ந்தவர் ராம்கி (25). இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் 2 பைக்கில் தீபாவளி அன்று இரு சக்கர வாகனத்தில் உத்திரமேரூர் பஜாருக்கு சென்றார். அரசாணி மங்கலம் மெயின் ரோடு வழியாக சென்றபோது கூச்சலிட்டபடி சென்றனர். அப்போது, அரசாணி மங்கலத்தை சேர்ந்த கண்ணன் (26) என்பவர் மீது பைக் உரசியதாக கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராம்கி மற்றும் அவரது நண்பர்கள், கண்ணனை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து உத்திரமேரூர் போலீசில் கண்ணன் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் ராம்கி மற்றும் அவரது நண்பர்கள் சிலர், நேற்று மாலை கண்ணன் வீட்டின் முன் சென்று  அப்பகுதிகளில் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசினர். இதில் அங்கிருந்தவர்கள் மீது பட்டதில்  சிலர் காயம் அடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் ராம்கி வசிக்கும் பகுதிக்கு சென்று கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் இருதரப்பினரும் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் கோஷ்டி மோதல் ஏற்படும் சூழல் உருவானது. உடனே மதுராந்தகம் டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் மோதலில் ஈடுபட்ட இராமலிங்கம் (34), சிவா(37),  மணி(48), முத்து(33), குமார்(42), இராதாகிருஷ்ணன்(30), யுவராஜ்(32), சுதாகர்(33), பார்த்திபன்(33), அன்பழகன்(45), இனியவன்(23), கோவிந்தசாமி(46), வெங்கடேசன்(37), அன்பு(20) ஆகியோரை போலீசார் கைது செய்து உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

No comments