Disqus Shortname

கம்மாளம்பூண்டியில் தாங்கல் மதகு உடைந்து நெல் பயிர்கள் சேதம்

உத்தரமேரூர்Nov 16, 2015:
 உத்தரமேரூரை அடுத்த கம்மாளம்பூண்டியில் தாங்கல் மதகு உடைந்ததால் நெல் பயிர்கள் சேதமடைந்தன.உத்தரமேரூர் வட்டம் கம்மாளம்பூண்டி கிராமத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் தாங்கல் உள்ளது. இந்த தாங்கலிலிருந்து மதகு வழியாக வெளியேறும் உபரி நீரை கம்மாளம்பூண்டியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்துக்காக பயன்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையில் தாங்கல் மதகு உடைந்து அருகில் உள்ள விவசாய நிலத்தில் மழைநீர் புகுந்தது. இதனால் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் பெருமளவு சேதமடைந்தது. மேலும் உடைபட்ட இடம் வழியாக ஏரியிலிருந்த மழைநீர் வெளியேறியதோடு மட்டுமல்லாமல் ஏரியிலிருந்த மண், கற்கள் உள்ளிட்டவை விவசாய நிலங்களை முற்றிலும் சேதப்படுத்தின.
சேதமடைந்த விவசாய நிலங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவும், உடைந்த மதகுகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கவும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments