Disqus Shortname

உத்திரமேரூரில் மாயமான வாலிபர்: கிணற்றில் பிணமாக கிடந்தார் கொலையா? - போலீஸ் விசாரணை

உத்திரமேரூர், டிச. 4-
                                            
                                       
 

உத்திரமேரூரை சேர்ந்தவர் அசீம். தோல் வியாபாரி. இவரது மகன் இம்ரான் (18) வேலைக்கு எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். கடந்த 2(2-12-2012)-ந்தேதி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இம்ரான் மாயமாகி இருப்பது தெரிந்தது. இது குறித்து உத்திரமேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில் உத்திரமேரூர் - எண்டத்தூர் சாலை ஓரத்தில் உள்ள கிணற்றில் வாலிபர் பிணம் மிதப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அவர் மாயமான இம்ரான் என்பது தெரிந்தது. கிணற்றின் அருகே அவரது மோட்டார் சைக்கிள் நின்றது. கிணற்றுக்குள் அவர் தவறி விழ வாய்ப்பில்லை.
எனவே அவரை யாரேனும் அடித்து கொலை செய்து கிணற்றில் வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இம்ரானுக்கு வேறு யாருடனும் மோதல் இருந்து வந்ததா? அல்லது அசீமுக்கு தொழில் ரீதியில் தகராறு உள்ளதா என போலீசார் விசாரித்து வருகிறார்கள். மாயமான வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் உத்திரமேரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments