Disqus Shortname

சுந்தரவரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

 உத்தரமேரூர் 17 April 2016:   உத்தரமேரூர் ஆனந்தவல்லி நாயகி சமேத சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. தொடர்ந்து காலை 7 மணி அளவில் பவழக்கால் சப்பரத்தில் சுந்தரவரதர் ஸ்ரீதேவி, பூதேவியருடன் திருவீதி உலா வந்தார். இரவு சிம்ம வாகனத்திலும், ஞாயிற்றுக்கிழமை காலை ஹம்ச வாகனத்திலும், இரவு சூரியபிரபையிலும் திருவீதி உலா நடைபெறும்.
 திங்கள்கிழமை அதிகாலை 4.00 மணி அளவில் கருட சேவையும், இரவு ஹனுமந்த வாகனத்திலும் உற்சவர் வலம் வருவார். செவ்வாய்க்கிழமை காலை சேஷ வாகனத்திலும், இரவு சந்திர பிரபையிலும் உற்சவ மூர்த்திகள் வலம் வருவார்கள். புதன்கிழமை காலை நாச்சியார் திருக்கோலம், இரவு யாளி வாகனத்தில் வீதி உலா நடைபெறும். வியாழக்கிழமை சூர்ணாபிஷேகம் நடைபெற்ற பின், வேணுகோபால் திருக்கோலத்தில் பெருமாள் காட்சி அளிப்பார். இரவு யானை வாகனத்தில் ஊர்வலம் நடைபெறும்.
 வெள்ளிக்கிழமை காலை திருத் தேர் பவனியும், இரவு அலங்கார திருமஞ்சனமும் நடைபெறும். சனிக்கிழமை காலை ஆடும் பல்லக்கு நிகழ்ச்சியும், இரவு குதிரை வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை ஆள்மேல் பல்லக்கு தீர்த்தவாரியும், இரவு வெட்டி வேர் சப்பரத்தில் வீதி உலாவும் நடைபெறும். திங்கள்கிழமை அலங்கார திருமஞ்சனமும், இரவு துவாதச ஆராதனையும் நடைபெறும்.

No comments