Disqus Shortname

குடும்ப தகராறு, கள்ளக்காதல் விவகாரத்தில் குடையின் பின்புற முனையில் விஷ ஊசியை வைத்து 3 பேரையும் குத்திக்கொலை செய்தோம்: கைதான ரியல்எஸ்டேட் அதிபர் வாக்குமூலம்

ஆலந்தூர்,

குடும்பத்தகராறு மற்றும் கள்ளக்காதல் விவகாரத்தில் 3 பேரையும் குடையில் விஷ ஊசியை இணைத்து குத்திக்கொலை செய்தோம் என கைதான ரியல் எஸ்டேட் அதிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.

ரியல் எஸ்டேட் அதிபர்
சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்(வயது 38). ரியல் எஸ்டேட் அதிபர். இவரது வீட்டில் கடந்த 4-ந் தேதி 40 பவுன் தங்க நகைகள் திருட்டு போனதாக நீலாங்கரை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் நீலாங்கரை போலீஸ் உதவி கமிஷனர் பாண்டியன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரஞ்சித்குமார், ரமேஷ் உள்பட போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார், ஸ்டீபனிடம் வேலை செய்பவர்கள் மற்றும் அவரிடம் வேலை செய்து நின்றுவிட்டவர்கள் ஆகியோரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

4 பேரும் கைது
அப்போது ஸ்டீபனிடம் வேலை செய்து நின்று விட்ட கொட்டிவாக்கத்தை சேர்ந்த பாலாஜி(32), ஆனந்தன் என்ற முருகானந்தம்(27), சதீஷ்குமார்(27) ஆகியோர்தான் ஸ்டீபன் வீட்டில் நகையை திருடியதாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் யோரை கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் அவர்கள், ஸ்டீபனுக்காக 3 பேரை விஷ ஊசி போட்டு கொலை செய்ததாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். இதையடுத்து ஸ்டீபனையும் போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் ஸ்டீபன் அளித்து உள்ள வாக்குமூலம் வருமாறு:-

கொலை செய்ய திட்டம்
எனக்கும், எனது மனைவிக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறில் என்னுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமான எனது மனைவி என்னை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இதற்கு சென்னை ஆயிரம் விளக்கில் வசித்து வந்த எனது மைத்துனர் ஜான்பிலோமின்தான் காரணம் என்பதால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்காக பாலாஜி, முருகானந்தன் ஆகியோரின் உதவியை நாடினேன்.

போலீசாரிடம் சிக்காமல் நூதன முறையில் அவரை தீர்த்து கட்டுவது எப்படி? என இணைய தளத்தில் தேடினேன். அப்போது விஷ ஊசி போட்டு கொலை செய்யும் தகவல்கள் கிடைத்தன. இதற்காக மும்பை சென்று ரூ.1½ லட்சம் செலவழித்து அங்கிருந்து பொட்டாசியம் சயனைடு என்ற வேதிப்பொருளை வாங்கி வந்தேன். அதை விஷ ஊசியாக செலுத்தி ஜான்பிலோமினை கொலை செய்ய திட்டமிட்டேன்.

குடையில் இணைத்துகுத்திக்கொலை
ஊசி மூலம் விஷத்தை செலுத்துவதற்கு நூதனமான முறையை பயன்படுத்தினேன். இதற்காக குடையின் பின்பகுதியில் கம்பி போன்று நீண்டு கொண்டிருக்கும் பகுதியின் நுனியை வெட்டினேன். அந்த நுனிப்பகுதியின் உள்ளே விஷம் ஏற்றப்பட்ட ஊசியை வைத்து இணைத்தேன்.

அந்த குடையை சாதாரணமாக மோட்டார் சைக்கிளில் பாலாஜியும், முருகானந்தமும் கொண்டு சென்றனர். பின்னர் ஆயிரம் விளக்கு பகுதியில் ஜான்பிலோமின் ரோட்டில் நடந்து சென்ற போது அந்த குடையை அவர் மீது குத்துவது போல் அதன்முனையில் இருக்கும் ஊசியை அவர் மீது குத்தினார்கள்.

சாலையில் செல்வோருக்கு இது யதார்த்தமான நிகழ்வாக தெரிந்ததால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. ஆனால் 5 நிமிடத்தில் விஷம் ஏறி ஜான்பிலோமின் இறந்து விட்டார். அவரது உடலை போலீசார் பரிசோதனை செய்த போது விஷ ஊசி போட்டதாக தெரியவில்லை. நெஞ்சு வலிக்கான அறிகுறியே தென்பட்டது. இதனால் அந்த கொலையில் இருந்து நான் தப்பினேன்.

பெண்ணுடன் கள்ளத்தொடர்பு
இதுபோல் உத்திரமேரூரில் ஒரு பெண்ணுடன் எனக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதற்கு இடையூறாக இருந்த அவரது கணவர் ஸ்ரீதர் என்பவரையும் பாலாஜி, முருகானந்தன் ஆகியோரை கொண்டு அதேபோல் விஷ ஊசி போட்டு கொலை செய்தேன்.

பின்னர் மடிப்பாக்கத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் எனக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அதற்கு அவரது கணவர் ஹென்றி இடையூறாக இருந்தார். எனவே ஹென்றியை கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்காக சதீஷ்குமார் உதவியை நாடினேன். அவர் மூலம் ஹென்றியையும் விஷ ஊசி போட்டு கொலை செய்தேன். இதற்காக சதீஷ்குமாருக்கு ரூ.1 லட்சம் கொடுத்தேன்.

இதற்காக விஷ ஊசியில் 1 மில்லி அளவு வேதிப்பொருளை செலுத்தினாலே போதும். ஆனால் நான் 5 மில்லி அளவு செலுத்தி 3 பேரையும் கொலை செய்தேன்.  இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

ஊசிகளை கைப்பற்றினர்
இதையடுத்து போலீசார் ஸ்டீபன் வீட்டில் சோதனை செய்தனர். அங்கிருந்து 10 சிரஞ்ச்கள், 10 ஊசிகள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

மேலும் 9 எம்.எம். மற்றும் 3.8 ரிவால்வர் வகை வெளிநாட்டு துப்பாக்கிகளையும், 5 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். இந்த 2 துப்பாக்கிகளையும் ஸ்டீபன் ரூ.12 லட்சம் கொடுத்து மும்பையில் வாங்கி உள்ளார்.

சிறையில் அடைப்பு
இதையடுத்து கைதான ஸ்டீபன், பாலாஜி, முருகானந்தம், சதீஷ்குமார் ஆகிய 4 பேரையும் போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 4 பேரையும் வருகிற 10-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க ஆலந்தூர் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு சுல்தான் ஆப்தீன் உத்தரவிட்டார்.

ஜான்பிலோமின், ஹென்றி, ஸ்ரீதர் பேரும் விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் ஆயிரம்விளக்கு, மடிப்பாக்கம், உத்திரமேரூர் பகுதிகளில் நடந்து உள்ளதால் அந்த பகுதி போலீசாருக்கு நீலாங்கரை போலீசார் தகவல் கொடுத்து, அந்த வழக்குகளை கொலை வழக்காக மாற்றி விசாரிக்க கடிதம் எழுதப்பட்டு உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த 3 வழக்குகளும் மீண்டும் விசாரிக்கப்பட உள்ளதால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டாளிகளுக்கு வலை
கைதான சதீஷ்குமார், என்ஜினீயரிங் முடித்து உள்ளார். இது தொடர்பாக அவரது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் ஸ்டீபனுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்த பெண்கள் இருவரும் அக்கா-தங்கை என்று கூறப்படுகிறது. அவர்களை பிடித்து விசாரிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

No comments