Disqus Shortname

உத்திரமேரூர் அருகே காட்டு பகுதியில் நிச்சயித்த பெண்ணுடன் வந்த புதுமாப்பிள்ளை மர்ம சாவு

உத்திரமேரூர்,ஜீலை 29 -
உத்திரமேரூர் அருகே நிச்சயதார்த்தம் முடிந்த பெண்ணுடன் கோயிலுக்கு சென்று விட்டு வந்தபோது, வனப்பகுதியில் புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாலை மாவட்டம் புன்னை கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு மகன் பாக்யராஜ் (26). இவரது அத்தை மகள் சுமித்ரா (22), கட்டியாம்பந்தல் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் மாங்கால் கூட் ரோடு அருகே சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். 

உறவினர் முறை என்பதால் இருவருக்கும் திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்து, நிச்சயதார்த்தமும் நடத்தி முடிக்கப்பட்டது. அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், இவர்கள் இருவரும் நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு பைக்கில் சென்றனர். சாமி தரிசனத்தை முடித்து விட்டு, மாலையில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். 
உத்திரமேரூர் அருகே மலையாளம் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் பைக்கை நிறுத்தி விட்டு இருவரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கோபத்தில் பாக்யராஜ், வனப்பகுதிக்குள் சென்று விட்டார். வெகு  நேரமாக சாலையோரம் நின்றிருந்த சுமித்ரா, வனப்பகுதிக்குள் சென்று பார்த்தபோது ஒரு மரத்தின் கீழே பாக்யராஜ் இறந்து கிடந்தார். உடலை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து கதறினார். மீண்டும் சாலைக்கு வந்து சத்தம் போட்டார். அவ்வழியாக வந்தவர்கள் உதவியுடன் உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் வழக்கு பதிந்து, பாக்யராஜ் இறந்தது எப்படி என்பது குறித்து சுமித்ராவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. - 

No comments