Disqus Shortname

உத்திரமேரூர் அருகே திருமண தரகர் படுகொலை

உத்திரமேரூர் நவ,07:
உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் அருகே, கல்யாண தரகர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் அடுத்த, சிறுதாமூர் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன், 54; முன்னாள் தி.மு.க., கிளை செயலர். இவர், திருமண தரகராகவும் இருந்து வந்தார். இவருக்கு மல்லிகா, 50, என்ற மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 
போலீஸ் விரைவு
பச்சையப்பன், கடந்த, 5ம் தேதி காலை, வெளியூர் செல்வதாக கூறி வீட்டை விட்டு, சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று காலை 10:00 மணி அளவில் திருமுக்கூடல் அருகே (மதுார் கூட்டு சாலை பேருந்து நிறுத்தம் எதிரில்), சாலை ஓர கால்வாயில், உடலில் ஆடைகளின்றி, பச்சையப்பன் தலை நசுங்கி, கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை கண்டு, அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, செங்கல்பட்டு ஏ.எஸ்.பி., படாளம் மற்றும் சாலவாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பச்சையப்பன் உடலை, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த பகுதியில் முட்புதரில் கிடந்த பச்சையப்பனின் ஆடைகள் மற்றும் அடையாளம் தெரியாத ஒரு கருப்பு நிற சட்டை, நான்கு காலணிகள், செல்போன் சிம் கார்டு ஆகியவற்றை போலீசார் கண்டெடுத்தனர் 
தீவிர விசாரணை


கொலை செய்யப்பட்ட பச்சையப்பனின் தலை பகுதிக்கு அருகில், ரத்த கறை படிந்து கிடந்த, 2 பெரிய அளவிலான கற்களை, போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றனர். சம்பவ இடத்திற்கு, காஞ்சிபுரத்தில் இருந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, இச்சம்பவம் குறித்த ஆதாரங்கள் திரட்டப்பட்டன. நேற்று முன்தினம் இரவு, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து, சாலவாக்கம் போலீசார், வழக்கு பதிந்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments