Disqus Shortname

ரூ.1 கோடியில் பேருந்து நிலைய மேற்கூரை

உத்திரமேரூர் 12 :
 உத்திரமேரூர், பேருந்து நிலைய பகுதிக்குள், ஒரு கோடி ரூபாயில் மேற்கூரை அமைக்கப்பட உள்ளது.

உத்திரமேரூர் நகரில், வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வேளாண் துறை அலுவலகம், சார் - பதிவாளர் அலுவலகம், காவல் நிலையம் போன்ற அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களுக்கு வருபவர்கள், மாணவர்கள், பணிக்குச் செல்பவர்கள் என, அனைத்து தரப்பினரும், உத்திரமேரூர் பேருந்து நிலையம் வந்து செல்கின்றனர்.
இந்த பேருந்து நிலையத்திற்குள் மேற்கூரை இல்லாததால், வெயில் மற்றும் மழைக் காலங்களில், பயணிகள் அவதிக்குள்ளாகும் நிலை இருந்து வருகிறது. இதனால், உத்திரமேரூர் பேருந்து நிலையத்திற்குள் மேற்கூரை அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, இப்பேருந்து நிலையத்தில் மேற்கூரை அமைக்க, உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 60 லட்சம் ரூபாயும், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 40 லட்சம் ரூபாயும் என, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, உத்திரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் கமல்ராஜ் கூறுகையில், 'உத்திரமேரூர் பேருந்து நிலையத்திற்குள் மேற்கூரை அமைக்கும் பணிக்காக, கடந்த 10ம் தேதி, ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டது. அதன் பேரில் நடந்து வரும் பரிசீலனை முடிந்ததும், பணி ஆணை வழங்கப்பட்டு, விரைவில் பணி துவங்கப்படும்' என்றார்.

No comments