Disqus Shortname

உத்திரமேரூரில் கெங்கையம்மன் ஆலய கூழ்வார்த்தல் திருவிழா கோலாகலம்

உத்திரமேரூர் 30/05/2023
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் 12 வது வார்டில் அமைந்துள்ள ஸ்ரீ கெங்கையம்மன்
ஆலய கூழ்வார்த்தல் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவிழா முன்னிட்டு கடந்த ஞாயிற்று அன்று கோவிலில் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களும் காலை மாலை வேலைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து மூன்றாம் நாளான நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மதியம் கோவில் வளாகத்தில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கெங்கையம்மன் கோவில் தெரு, செங்குந்தபிள்ளையார் கோவில் தெரு, காமராஜர் தெரு, கண்ணதாசன் தெரு, தண்டுகாரத் தெரு, கிண்டி வெங்கட்டையா பிள்ளைத் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு கூழ் ஊற்றியும், நெய் திபம் ஏற்றியும், கொழுக்கட்டை பொம்மைகள் செய்து அம்மனுக்கு படையலிட்டும் கோவிலை வலம் வந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் கூழ் ஊற்றப்பட்டது. இரவு மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் தேங்காய் உடைத்து தீபாராதனை காண்பித்து அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். விழாவையொட்டி கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

No comments