உத்திரமேரூர் அருகே 100 நாள் பணியாளர்கள் திடீர் சாலை மறியல்
உத்திரமேரூர்அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் கடந்த வாரம் கொரோனா தொற்று பரிசோதனை முகாம் நடைப்பெற்றது. இம்முகாமிற்கு மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மற்றும் கிராமவாசிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த முகாமிற்கு நுாறு நாள் வேலை உறுதிதிட்ட பணியாளர்கள் பலர் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் நுாறு நாள் வேலைக்காக பணியாளர்கள் சென்றனர். அப்போது கொரோனா பரிசோதனை செய்து கொள்ளாதவர்களுக்கு வேலை இல்லை என பலரை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் நூறுநாள் வேலை உறுதி திட்ட அலுவலர்களிடம் பணியாளர்கள் வாக்குவாததில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த நூறு நாள் பணியாளர்கள் திடீரென உத்திரமேரூர் – காஞ்சிபுரம் சாலையில் திருப்புலிவனம் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த அரசுதுறை அலுவலர்கள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் பொது மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
No comments