உத்திரமேரூர் அருகே முற்புதரில் மூடிகிடக்கும் நூலகம் பாழாய் போகும் புத்தகங்கள்
உத்திரமேரூர் 21-11-2019
உத்திரமேரூர் அடுத்த அரசாணிமங்கலம் கிராமத்தில் இளைஞர்கள், பொது மக்கள், மாணவ- மாணவியர்கள் என அனைத்து தரப்பினர்களும் பயன்பெறும் வகையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த 2007 ஆம் ஆண்டு புதியதாக நூலகம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த நூலகத்தில் பல தரப்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தினசரி நாளிதழ்கள் மற்றும் புத்தகங்கள் வரவழைக்கப்பட்டு பொது மக்கள் இளைஞர்கள் மாணவ-மாணவியர்கள் என அனைத்து தரப்பினரும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக இந்த நூலகம் திறக்கப்படாததால் பூட்டியே கிடக்கிறது. இதனால் நூலகத்தினை சுற்றி முற்செடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. மேலும் நூலக கட்டிடத்திற்கு உள்ளே உள்ள புத்தகங்கள் புழுதி படிந்து பாழாகி வருகிறது. இதனால் இந்த நூலகத்தினை திறக்க வேண்டும் என கிராம மக்கள் பல்வேறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நூலகத்தினை சுற்றியுள்ள புதரிலிருந்து விஷப்பூச்சுகள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதால் பகுதிவாசிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும் நூலகமில்லாததால் இளைஞர்கள், மாணவ-மாணவியர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நூலகத்தினை சீரமைத்து திறக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments