Disqus Shortname

உங்கள் தொகுதியில் முதல்வர்

 தமிழகம் முழுவதும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற தேர்தல் பரப்புரையின்போது, மாவட்டதோறும் பொது மக்களிடம் பல்வேறு பிரச்னை தொடர்பான மனுக்களை பெற்று கொண்டார். அப்போது தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் மனுக்களின்  மீது 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்தார். அதனடிப்படையில்  தமிழக முதல்வராக பதவியேற்றதும் உங்கள் தொகுதியில் முதல்வர்  என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கினார். இத்திட்டம் மாவட்டம் முழுவதும் செயல்பட துவங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாடாதவூர் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி கீர்த்திகா, 15 வாடாதவூர் கிராமப் பகுதிக்கு சாலை வசதி மற்றும் தெரு மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை மனு அளித்திருந்தார். அம்மனுவிற்க்கு தீர்வு காணும் வகையில், உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி  அலுவலர்கள் முத்துகுமார் மற்றும் வேல்முருகன் ஆகியோர் வாடாதவூர் கிராமத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மனு அளித்த சிறுமி கீர்த்திகாவிடம் கோரிக்கை குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். வாடாதவூர் கிராம  சாலைகளை ஆய்வு செய்து மின்விளக்கு அமைப்பது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு  பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாகவும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், சாலை அமைக்கும் பணி கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன், துவக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.


No comments